👉 திரை பொக்கிஷம் - காதல் :
எதார்த்தத்தை சொல்லும் இயக்குனர்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர் பாலாஜி சக்திவேல். நிகழ் காலத்தில் நடந்ததை, வெள்ளித்திரையில் கற்பனை கலந்து காட்டுவதில் கைதேர்ந்தவர்.
அப்படி இவர் உருவாக்கின ஒரு படைப்புதான் 2004-ஆம் ஆண்டில் வெளிவந்த "காதல்" திரைப்படம்.
ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த நபரின் உண்மை கதையை மையமாக வைத்து, பல கற்பனை காட்சிகளை சேர்த்து, இப்படத்தை பாலாஜி சக்திவேல் உருவாக்கினார்.
ஒரு திரைப்படம் உள்ளுணர்வுகளை தூண்ட வேண்டும். படம் முடிந்து வெளியே வரும்பொழுது ஒரு திருப்தி ஏற்பட வேண்டும் என்று தான், ஒரு சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் இப்படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது, கனத்த இதயம் ஏதோ செய்து கொண்டே இருந்தது பல ரசிகர்களுக்கு....
ஏழை மெக்கானிக்காக நாயகன், ஜாதி மற்றும் பணபலம் மிக்க நபரின் மகளாக நாயகி. இருவருக்குமிடையே காதல் முளைத்து, மதுரையிலிருந்து சென்னை சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.
நாயகியின் உறவினர்கள் சமாதானம் பேசி, காதல் ஜோடியை மதுரைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது தான், பரபரப்பூட்டும் கிளைமாக்ஸ் காட்சிகள்.
ஜோஷ்வா ஸ்ரீதர் என்ற இசையமைப்பாளர், இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். முதல் படம் என்று தெரியாத அளவு இசையில் ஸ்கோர் செய்து இருப்பார்.
எல்லாவற்றிற்கும் மேலாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எளிமையான தரமான படங்களை தயாரிக்க விரும்பி, எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை துவக்கினார். அதன் முதல் திரைப்படம் இந்த "காதல்".
கனத்த காதலின் ஒருமித்த உணர்வை சொல்ல கீழ்காணும் இந்த ஒரு பாடல் போதுமானது. காதலின் வலிகளை , தனது வரிகளில் விதைத்தவர் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.
வளையாமல் நதிகள் இல்லை.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை!!!

No comments:
Post a Comment